Sunday, 10 January 2021

WhatsAppன் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் - சிக்கலான மாற்றங்கள்

 

நீங்கள் சமூக ஊடங்கங்களை பயன்படுத்துபவராக  இருந்தால் WhatsApp அதன் சேவை விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளதை அறிந்திருப்பீர்கள். (https://www.whatsapp.com/legal/updates/privacy-policy/?lang=en) இந்த மாற்றங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் உங்களால் பிப்ரவரி 8ம் தேதி முதல் அதன் சேவைகளை பயன்படுத்த முடியாது.



ஏன் இந்த மாற்றங்கள்?

WhatsApp 2014 முதல் Facebookன் துணை நிறுவனமாக இருந்து வருகிறது. சமூக ஊடக ஜாம்பவானான Facebook , அதனுடைய துணை நிறுவனங்களான Instagram (இதை 2012ம் வருடம் Facebook வாங்கியது)  மற்றும் WhatsAppஐ தன்னுடன் முழுவதுமாக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.Facebookன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் இதை அக்டோபர் 2020 இல் வெளிப்படையாக அறிவித்தார். Instagram மற்றும் FB Messenger தரவுகளை பகிரும் வகையில் ஏற்கனவே முழுவதுமாக இணைக்கப் பட்டு விட்டன.

இந்த  புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் WhatsApp   வணிக நிறுவனங்கள்  B2B மற்றும் B2C தொடர்புகளுக்கு பயன் படுத்த வழிவகை செய்யும். மேலும் இந்தியாவில் WhatsApp UPI வழியாக செய்யப்படும் பணப்பரிவர்த்தனை சேவைகளையும் தொடங்கியுள்ளது. இவற்றின் மூலமாக பெறப்படும் தரவுகள் அனைத்தும் Facebookக்கின் விளம்பர தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

அமெரிக்காவில் நடந்து வரும் ஒரு முக்கியமான ஆன்டி-டிரஸ்ட் வழக்கை முறியடிக்கும் எண்ணத்திலும் இந்த மாற்றங்களை Facebook செய்திருக்கலாம். பொதுமக்களின் தரவுகளை கையாளும் ஏகபோக வணிக நிறுவனமாக  Facebook மாறுவதை தடுக்கும் நோக்கில் அமெரிக்க Federal Trade Commission மற்றும் பல அமெரிக்க மாநிலங்கள் Facebook மீது வழக்குத் தொடுத்துள்ளன. அவர்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று Instagramமும் WhatsAppம் Facebook உடன் தரவுகளை பகிராத தனிப்பட்ட நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்பது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள  தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளின் மாற்றங்களின் மூலம் Facebookஆனது  இன்ஸ்டாகிராம் மற்றும்  WhatsApp உடன் இன்னும் இறுக்கமாக இணைக்கப்பட்ட நிறுவனமாக உருப்பெறும். இதன் மூலம்  மேற்சொன்ன முக்கிய கோரிக்கையை அந்த நிறுவனம் நினைத்தாலும் செயல்படுத்த முடியாது என்று வாதிட வழி  ஏற்படும்.

எல்லாம் சரி... நம்மைப் போன்ற சாதாரண பயனர்களுக்கு என்ன பாதிப்பு ?

நமது தனியுரிமை நிச்சயம் பாதிக்கப்படும். WhatsApp நம்மைப் பற்றி சில தரவுகளை வைத்திருக்கிறது. அதே போல Facebookம் சில தரவுகளை சேகரித்து வைத்திருக்கும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் தனித் தனியாக சேமிக்கப்பட்டிருக்கும். இந்த தரவுகள் இணைக்கப் பட்டால் Facebook நிறுவனத்திற்கு நம்மைப் பற்றி இன்னமும் அதிக விஷயங்கள் தெரிய வரும்.

உதாரணத்திற்கு WhatsAppல் பயன் படுத்தப் படும் ஒரு தொலைபேசி எண்ணிற்கும் அதே சாதனத்தில் பயன்படுத்த படும் Facebook கணக்கிற்கும் உள்ள தொடர்பு, அந்த கணக்குகள் வெவ்வேறு பெயர்கள்/எண்களை கொடுத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் , அந்த நிறுவனத்திற்கு தெரிய வரும். 

February 8 முதல் நமது WhatsApp தொடர்புகள், நாம் பங்கேற்றுள்ள குழுக்கள் போன்றவை நமது Facebook தரவுகளுடன் இணைத்து செயலாக்கப்படும். மேலும் நாம்  WhatsAppன் பணப்பரிவர்த்தனை சேவைகளை உபயோகித்தால் நமது வங்கிக்கணக்கு  மற்றும் Card விவரங்களும் Facebookன் வசமாகும். மேலும் WhatsAppற்கு நாம் வழங்கியுள்ள "Location" அனுமதியின் மூலம் திரட்டப்படும் தரவுகள் Facebook உடனும் பகிரப்படும்

இதெல்லாம் நிஜமாகவே நடக்குமா? WhatsAppன் சேவை விதிமுறைகள் சொல்வது என்ன?

 “We collect information about your activity on our Services, like service-related, diagnostic, and performance information. This includes information about your activity (including how you use our Services, your Services settings, how you interact with others using our Services (including when you interact with a business), and the time, frequency, and duration of your activities and interactions), log files, and diagnostic, crash, website, and performance logs and reports. This also includes information about when you registered to use our Services; the features you use like our messaging, calling, Status, groups (including group name, group picture, group description), payments or business features; profile photo, "about" information; whether you are online, when you last used our Services (your "last seen"); and when you last updated your "about" information.”

மேலும், நமது இணைப்பு மற்றும் சாதனத்தை பற்றிய தகவல்களான Model, Operating System, Browser, IP Address, Phone Number, Device Identifier  போன்றவையும் எப்போதும் போல திரட்டப்படும். இவற்றோடு புதிய கொள்கையின் படி Battery level, Signal strength, App version, மற்றும் Facebookன் மற்ற நிறுவனங்களான Crowd Tangle (https://www.crowdtangle.com/)  மற்றும் Oculusற்கு (https://www.oculus.com/) பயன்படும் identifiers போன்றவையும் திரட்டப்படும்.

இவை அல்லாமல் WhatsAppல் உள்ள வணிக நிறுவனங்களும் பயனர் தகவல்களைப் அந்நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வார்கள். இந்த தகவல்கள்/தரவுகள் எல்லாம் Third-Party  Service providers உடன் பகிரப்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளன .

Facebook முதலீடு செய்துள்ள Jio Platform நிறுவனம் இந்தியாவில் WhatsApp மூலம் சில்லறை வணிகத்தில் இறங்க முடிவு செய்தால் மேற்கண்ட தகவல்கள்/தரவுகள் அனைத்தும் மிக முக்கியமானவையாக உருப்பெறும்.

 

ஆனால் இவை வெறும் தகவல்கள் தானே? நாம் கவலைப்பட என்ன இருக்கிறது ?

நம்மை பற்றி அதிக அளவிலான தகவல்கள் வெவ்வேறு வழிகளில் திரட்டப்பட்டு ஒன்றிணைக்கப்  படும் போது நமது அனைத்து சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளையும் ஒரு நிறுவனம் அறிவது மட்டுமல்லாமல் அதன் மேல் தாக்கம் செலுத்தவும் முடியும்.

குறிப்பாக இந்தியா போன்ற வலுவான Privacy Protection Laws இல்லாத நாடுகளில் அலுவலக விஷயங்கள், குழந்தைகளின் பள்ளி சார்ந்த விஷயங்கள் போன்றவை இவ்வாறான வெளிநாட்டு செயலிகளில் பகிரப்படும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் மிக அதிகம்.

ஆனால் WhatApp chatகள் அனைத்தும் End-to-End Encrypted அல்லவா?

உண்மைதான். ஆனால் வெவ்வேறு வழிகள் மூலமாக திரட்டப்பட்ட தரவுகளை இணைத்து பெறப்படும் Big-Picture நமது Chatகளை படிப்பதை விட அதிக தனிப்பட்ட விவரங்களை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. முன்னெப்போதையும் விட நமது தனிப்பட்ட உரையாடல்களை WhatsApp மூலம் தான் நிகழ்த்த வேண்டுமா என யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சரி , முடிவாக என்னதான் செய்வது ?

WhatsApp ஐ பொறுத்த வரை இந்த மாற்றங்களை ஏற்பதை தவிர அதன் சேவைகளை உபயோகிக்க வேறு வழி ஏதும் இல்லை.

Privacy Focused செயலி வேண்டுமென்றால் Signal (https://signal.org/download/) உபயோகிக்கலாம். ஆனால் நமது தொடர்புகள் , நண்பர்கள் அனைவரும் அதற்கு மாற வேண்டும். பெரும்பாலானோர் உபயோகிக்கும் மற்றொரு செயலி ரஷ்ய பின்புலம் உள்ள Telegram (https://telegram.org/).

 

இவற்றில் எதை உபயோகித்தாலும் அவற்றின் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் ஆகியவற்றை படித்து , சாதக பாதகங்களை அறிந்து உபயோகித்தால் எந்த பிரச்சனையும் இல்லை.